தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்* தூமம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்* மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்* மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்* ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ* மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று* நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
திருப்பாவை 9
கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும் ஒருத்தியை இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். வெளியே இருப்பவர்கள் இளைய பெருமாளை (லக்ஷ்மணன்) போலவும், முக்தி அடைந்தவர்கள் போலவும், உள்ளே இருப்பவள், நித்ய சித்தர் போலவும் மைத்துனமை உறவை உடைய ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் மணம் வீச பெற்ற நன்மணி மாடத்தில் மெல்லணை மேல் கண் துயில்கின்ற மாமான் மகளை நோக்கி “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று வெளியே நிற்பவர்கள் சொல்ல, அவள் அதனைக் கேட்டும் மறுமொழி ஒன்றும் கூறாதவளாய்க் கிடக்க, அப்படி கிடப்பதைக் கண்ட அவள் தாயார் “இத்தனை பெண்பிள்ளைகள் வருந்தி வாசலிலே நின்று துவள, இவள் ஒரு பேச்சும் பேசாதே உறங்குவது என்ன நீதி!’ என்று நெஞ்சில் கொண்ட இரக்கம் முகத்திலே தோன்றும்படி இருப்பதை பார்த்த ஆச்சியர்கள், ‘மாமீர்! அவள் ஓருத்தி எங்கள் திரளில் சேராமையாலே நாங்கள் படும்பாட்டை பாருங்கள்; உமது மகளைச் சிறிது உணர்த்தல் ஆகாதா, நாங்கள் நெடு நேரமாக நின்று கூவும் போதும், இவள் மாற்றம் ஒன்றும் இல்லாமல் இருக்கிறாள்; இவள் ஊமையா, செவிடா, பெரிய உறக்கம் பிடித்தவளா, அன்றி, இவள் எழுந்து இருக்கக் கூடாது என்று யாரேனும் படுக்கையில் காவலில் இடபட்டு இருக்கிறாளா அல்லது மந்திரத்தினால் ஸர்ப்பத்தைத் கட்டுவது போல், இவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதபடி யாரேனும் செய்து விட்டார்களா; எங்களுக்கு என்ன என்று தெரியவில்லை. இதனைக் கேட்ட தாயார் ‘நீங்கள் அப்படி ஒன்றும் சந்தேகிக்க வேண்டாம். பகவான் நாமங்களை சொல்ல தொடங்கினீர்கள் ஆனால், அவள் தன்னடையே உணர்ந்து எழுந்து வருவள்’ என்று சொல்ல, அப்படியே நாங்கள் பல பகவான் நாமங்கள் சொல்லியும், இன்னும் யாம் என்ன செய்யவேண்டும்’ என்கிறார்கள்.
தூமணி மாடம் என்ற அடைமொழியினால் இங்குள்ள மாடத்து மணிகள், பிறந்தது முதல் பரம பாவனங்களாய் எப்போதும் ஒரு பாவ சம்பந்தங்களும் இல்லாமல் இருந்தன. முக்தர் என்பவர் சில நாள் ஸம்ஸாரத்தில் இருந்து பின்னர் அந்த பற்று நீக்கியவர் ஆவார். இது நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் துவளில் மாமணி (6.5.1) என்ற பாடலில், ‘துவள் இல்’ என்று சொல்லி, குற்றம் இல்லாத என்பதற்கு ஒப்பாகும். நித்தியர் என்பவர் என்றும் ஸம்ஸார ஸம்பந்தமே இல்லாமல், எப்போதும், பரவாஸுதேவனுக்கு கைங்கர்யம் செய்யும் அனந்த, கருட, விஷ்வக்ஸேநர்கள் ஆவார். இது இந்த பாடலில் சொன்ன தூ என்ற சொல்லுக்கு ஏற்றபடி ஒரு பாவ சம்பந்தமும் என்றும் இல்லாதபடி என்பதற்கு ஒப்பாகும்.
வெளியே நின்று துவள்கின்ற எங்கள் நெஞ்சு இருண்டு புகைய, உள்ளே சுற்றும் விளக்கெரியும்படியாகப் பெற்ற பாக்கியமே பாக்கியம் என்னும் வயிற்றெரிச்சல் தோன்றுவது இயல்பு. சுற்றும் விளக்கு எரிய என்பது மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது என்கிறார். கிருஷ்ணன் வந்தால் தன் கையை பிடித்து உலாவும் இடமும் படுக்கையும் நன்றாக தெரியும் படி உள்ளது என்கிறார்.
தூமணி மாடம் ஆகையாலே, உள்ளே எரிகிற விளக்கு வெளியே தெரிகிறது. அதனால் வெளியே நின்று ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்கிறவர்கள், உள்ளே எரிகிற விளக்கு எரிந்ததை தெரிந்து கொண்டார்கள்.
“தூபம் கமழ” என்ற சொல் நயத்தால், கண்ணுக்குப் புகையாகத் தோன்றுவது அன்று, பரிமளம் மிளிர இருப்பது என்று சொல்கிறது. துயிலணை என்று சொல்வதால், படுத்துக் கொண்டவுடனே உறக்கத்துக்குப் பரவசமாக்கவல்ல மெத்தை என்பது தெரியும். இதனால், அப்படுக்கையின் மென்மை, குளிர்த்தி முதலிய குணங்கள் விளங்கும். நாங்கள் இங்கே இப்படி இருக்க, நீ துயிலணையில் கண்வளர்வது நமது நட்புக்கு பொருந்துமா என வெறுத்துக் கூறுகின்ற பாவம் விளங்கும். “துயிலணைமேல உறங்கும்” என்று சொல்லாமல், “கண்வளரும்” என்றது, பகவத் விஷயத்தை ஏற்று கொண்டவர்கள் எப்போதும் கௌரவிக்கத் தக்கவர் என்ற கருத்தை காட்டுவதற்காக என்று கொள்க. வெறுத்துக் கூறுவதெல்லாம் ஆற்றாமையின் செயலே என்று கொள்க. “மாமன் மகளே” என்று சொன்னது, ‘திருவாய்ப்பாடியிலே ஒரு அடியவரின் ஸம்பந்தம் தனக்கு மோக்ஷம் கொடுக்க உதவும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்று உரையாசிரியர் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் கூறி உள்ளார்.
“ஊமையோ செவிடோ ‘ என்ற வினாக்களுக்கு உட்கருத்து அடியவர்கள் விஷயத்தில் இரக்கமுற்று ‘ஐயோ !’ என்று ஓரு வார்த்தை சொல்வதற்கு உன் மகளுக்கு முடியாதோ என்றும், அடியவர்களாகிய எங்களுடைய கூக்குரல் அவள் செவியில் விழவில்லையா, அப்படி உன் மகள் உள்ளே செய்யும் காரியம் என்ன என்று கேட்கிறார்கள்.
அனந்தலோ என்று சொன்னதால், கண்ணனோடு நெடு நேரம் கூடிக் களித்துப் படுக்கையில் இப்போது தான் சாய்ந்தனளோ என்று கேட்பது தெரியும். ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ என்று சொன்னதால், உன் மகளை யாரேனும் உணரவொண்ணாதபடி மந்திரவாதம் செய்து கட்டுப்படுத்தினரோ என்று கேட்பது விளங்கும்.
இவர்கள் இப்படி வினவுவதை கேட்ட தாயார், “பெண்களே, நீங்கள் இவளுக்கு உகந்த எம்பெருமான் திருநாமங்களை வாயார அநுஸந்தித்தீர்களாகில், சடக்கென உணர்ந்து வருவாள்” என்று சொன்னார்.
மாமாயன் என்று சொல்வதற்கு, அபலைகளான பெண்களைத் தன் வசப்படுத்திக் கொள்ளுதற்குச் சாதனமான பல ஆச்சரிய குண சேஷ்டிதங்களை உடையவன் என்பதை பொருளாக கொள்ளலாம்.
மாதவன் என்பதால், இடக்கை வலக்கை அறியாத இடைச்சியர்களை மாத்திரம் வசப்படுத்திக் கொண்டவன் அல்லன் அவன், அல்லி மலர் மகளை இறையும் அகலவொண்ணாதபடி மார்பில் அழுத்திக் கொண்டு உள்ளவன் காணுங்கள் என்பதை சொல்வது புரியும்.
வைகுந்தன் என்பதால், இங்குள்ள பெண்களை மாத்திரம் தோற்பிக்க வல்லவன் இல்லை, கண்கள் துஞ்சாமே கண்டபடியே நிற்கும் நித்திய ஸூரிகளை ஒரு நாடாக உடையன் என்பதை தெரிவிக்கும். என்றென்றும் என்று சொல்வதால், இவைகளை போன்ற பல திருநாமங்கள் கூறியது விளங்கும்.
இது திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள். இந்த பாசுரத்தில், மாமான் மகளே என்று கூப்பிடுவது ஒருவகையான தேஹ ஸம்பந்தத்தை சொல்வது. ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹ ஸம்பந்தம் உண்டு : ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆவாள்; லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள். திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவர். ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலே ஆனார் அவர். ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள். இதுவும் ஒற்றுமை நயம்.
தூமணி மாடத்து என்றது, சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளே உள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும். திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக் கொண்டபடியே உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால் இவர் தூமணிமாடம் என்று சொல்ல தகுதி உடையவர் ஆவார். சுற்றும் விளக்கெரிய என்று சொல்வதில், விளக்காவது ஞானவொளி. “சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் ஞான விளக்கம் பெற்றவராதலால் சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.
தூபம் கமழ என்பது சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது, அது நன்கு பரிமளிக்கவேண்டும். எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாது இருத்தலே ஞானத்திற்குப் பரிமளம். “மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.
துயிலணை மேல் கண்வளரும் என்று சொல்வதில் இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது சயனத் திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான். கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது. சயனத் திருப்பதிகளையே ஒரு கோர்வையாக பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்; நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் – நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்”
துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே! என்று சொல்வதில், மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம். மாமான் என்றது மஹா மஹான் என்றபடி. துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி எம்பெருமான்; அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்; ‘கணிகண்ணன் போகின்றான் – நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போதும், “உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்றபோதும் ஆழ்வார் சொல்படி கேட்டார். இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் ஆராவமுதன் என்று எடுத்து கொண்டால், அந்த எம்பெருமானும், “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற ஆழ்வாரின் வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.
உன் மகள் தான் ஊமையோ என்பதை எடுத்துகொண்டால், வாய் திறவாமலே கைகளால் காரியம் செய்து புரிய வைப்பது ஊமைகளின் பணி. இவ்வாழ்வாரும் யாத்திரையின் போது, பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டுவாசல் திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த அந்தணர்கள் நீறுபூத்த நெறுப்புப் போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்து கொள்ளாமல் அவரைக் கீழ்ச்சாதியராக எண்ணி வேத அத்யயனம் அவருடைய காதில் பட கூடாது என்று கருதி வேதம் ஒதுவதை தவிர்ந்திருக்க, அக்குறிப்பை அறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறு ஒரு வீட்டின் மேடையில் வீற்றிருக்கையில் அந்த வேதியர்கள் மீண்டும் வேதம் ஓதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க, ஆழ்வார் அது கண்டு கறுப்பு நெற்களைக் கை உகிராலே இடந்து போட, அப்பொருளுள்ள வேத வாக்கியம் அவர்களுக்கு உடனே தோன்றிற்று. உடனே அவர்கள் இவரை உபசரித்தனர் என்பது சரித்திர வரலாறு. இப்படி வாய்திறவாமலே காட்டினது பற்றி ஊமையோ என்றது.
மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரமபோக்யங்களென்பது இவருடைய பாடல்களில் இருந்து தெரிய வரும்.
Leave a comment