திவ்ய பிரபந்தம்

Home

T8 கீழ் வானம்

திருப்பாவை 8

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்படி கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாக இருப்பாள் ஒருத்தியை உணர்த்தும் பாசுரம் இது.

பாவாய்! கீழ்வானம் வெள் என்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க, இதனைக் கேட்ட அவள், அதற்குள் இராக்காலம் கழிந்ததோ, கீழ் வானம் வெளுக்கை யாவது என்ன ? நீங்கள் நெடுநேரமாக கீழ்த் திசையை நோக்கிக் கொண்டு இருக்கையாலே உங்களுடைய முக நிலா கீழ்த்திசையில் சென்று திரும்பி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலித்து தோன்றுகையாலே கிழக்கு வெளுத்தது போலத் தோற்றுகிறது; வேறு அடையாளம் இருந்தால் சொல்லுங்கள் என, எருமைகள் பனிப் புல் மேய்கைக்காகச் சென்றது அடையாளம் என்கிறார்கள்.

சிறு வீடு மேய்கையாவது ஊர்ப்பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை.  நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

அவை மெய்யே எருமைகளல்ல; இது உங்களுடைய விபரீத ஞானம் என்று சொல்ல, அது கேட்ட இவர்கள், பொழுது விடிய வில்லை என்பதற்கு அடையாள உண்டாகில் நீ சொல்லாய் என்று சொன்னார்கள். திருவாய்ப்பாடியில் அஞ்சுலக்ஷம் குடிப் பெண்களுண்டு: இப்போது இங்கு வந்துள்ள பெண்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டு இருக்க மாட்டார்கள். மற்றவர்களும் உணர்ந்து வர வேண்டாவோ? அவர்கள்  உணர்ந்து எழுந்து வாராமை, விடியாமைக்கு அடையாளமாகக் கொள்ளலாம் என்றாள். இவர்கள், உன்னை ஓழிந்த பெண்டிர் அனைவரும் உணர்ந்து எழுந்து புறப்பட்டுப் பாவைக்களத்தை நோக்கிச் செல்ல, உன்னைத் தவிர்த்துச் செல்லுதல் உரியதன்று என்று, உன்னை அழைப்பதற்காக உன் மாளிகை வாசற்கடையிலே வந்து படுகாடு கிடக்கின்றோம் என்கிறார்கள்.

உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதை காட்டிலும், அத்தலத்தை நோக்கிச் செல்லுகைதானே, அர்ச்சிராதிகதி போல், போக ரூபமாக இருக்கும். போவான் போகின்றாரை என்பதற்கு அதே போல அர்த்தத்தை எடுத்து கொள்ளலாம்.

இப்படி இத்தனை ஆய்ப்பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்வதற்கு காரணம், இவள் கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாய் இருப்பது, இதனை கோதுகலமுடை பாவாய் என்று அழைப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கோதுகலம் என்பது ஆசை. கண்ணனிடம் ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள பாவை என்பது இதன் அர்த்தம்.

ஸர்வசேஷியான எம்பெருமான் சேஷபூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமை உடையனாய் இருந்து, அவன் அப்படி செய்யாது இருந்தால், நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கும் இடத்திற்கு சென்று சேவித்தால், அவன் நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே; அன்ன நடை அணங்குகளை கஷ்டப் படுத்தினோமே என்று, தான், இரக்கம் கொண்டு நம் காரியத்தைச் செய்து முடிப்பான். எல்லாருமாகத் திரண்டு, எழுந்து வா என்று அழைக்கின்றனர்.

எழுந்திருந்து நாம் பெறபோகின்ற பலன் என்ன என்று கேட்டு, கிருஷ்ண திரு நாமங்களை வாயாரப் பாடியதே ஒரு பலன் என்றும், பறை கொண்டு என்பதை, நாட்டிற்கு பறை கொண்டு என்றும், தங்களுக்கு கைங்கரியம் கொண்டும் என்பதை மற்றொரு பலன் என்றும் சொல்வார்கள்; மாவாய் பிளந்தானை என்பதை தங்களுடைய விரோதிகளை அழித்தவனே என்றும், மாவாய் என்பதை விரோதிகள் நாம் தீர்ந்தோம் என்று விழுவதை சொல்லியும் , மல்லரை மாட்டிய என்பது கண்ணனுடைய வீர சரித்திரங்களை பேசியும், தேவாதி தேவனை என்று சொல்லும்போது, அப்படிப் பட்ட மேலான உயர்ந்தவனை என்றும் சொல்கிறார்கள். 

அப்படிபட்டவர் அபலைகளான நம்மை பார்ப்பவரோ என்றால், அப்படி பார்த்தால் அது எப்படிப்பட்ட பேறு என்று அவனை சென்று சேவித்தால், அவன் நம் காரியம் முடிக்காமல் இருப்பானா என்கிறார்கள். அப்படி செய்யாமல் இருந்தால் பரதாழ்வான் பட்டது நாமும் பாடுவோம் என்கிறார். மேலே சொன்னவை எல்லாம் நமக்கு இல்லை என்றாலும், ஆர்த்தி கண்டால் காகத்துக்கு இரங்கியவன் (காக்காசுர வரலாறு), நமக்கு இரங்காமல் போவானோ என்றும் (ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோர்) சொல்கிறார்.

நம்மாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள். கோதுகலமுடைய பாவாய் (ஆசை உடைய பாவாய்), என்ற விளி, நம்மாழ்வாரை குறிக்கும்.  எம்பெருமானிடத்தில்  ஆசையையுடைய, அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள  என்று இருவகையாகவும் பொருள்படும்.  பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது க்ருஷ்ண குதூஹலமே  நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்பார். பாவாய் என்று அழைப்பதும், இவருக்குப் பொருந்தும்.  திருவாய்மொழியில் பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.  எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது; மற்றை ஆழ்வார்கள் எல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக்கோலமாகவே யுள்ளார்கள் ; நம்மாழ்வார் ஓருவரே வீற்றிருந்த திருக்கோலம்.  கீழ்வானம் வெள்ளென்று என்று உதயகாலத்தில் கிழக்கு வெளுப்பதை சொற்தொடரும், வகுளு பூஷண பாஸ்கரோதய மாதலால் இதுவும் அவருக்கு பொருந்தும். எருமை சிறுவீடு மேய்வான் என்பதில் வீடு என்பது மோக்ஷம் என்றும், சிறு வீடு என்பது கைவல்ய மோக்ஷம் என்றும் இந்த குறிப்புகளை இந்த ஆழ்வார் திருவாய்மொழியில், குறுக மிக உணர் வத்தொடு (4-1-10) சொல்லி உள்ளார். இப்போது ஆண்டாள் நோற்பது போல நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;  வீற்றிருந்தேழுலகும்(4.5) என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை (4.5.1) என்று முதலிலும் வண்டமிழ் நூற்க நோற்றேன் (4.5.10) என்று முடிவிலும் வருவது காண்க.  அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை (அமரர்கள் அதிபதி 1.1.1) அநுபவிக்கின்ற ஆழ்வார் மாவாய் பிளந்தானென்ற விசேஷத்தை முதற்பாட்டில் அருளினார்.

Leave a comment